
ஷா ஆலாம், ஆகஸ்ட் 20 — நாட்டில் தற்போதுள்ள விற்பனை SST வரியுடன், சேவை வரி GST-யின் சில அம்சங்களை இணைத்து புதிய வரி முறையை உருவாக்குவது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிதி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் பேச்சாளரும் தகவல் தொடர்பு அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் இதனைத் தெரிவித்தார்.
நிதி அமைச்சின் இரண்டாவது அமைச்சரான டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகள் அமைச்சரவையின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த ஆய்வு தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. இது அவசரமாக முடிவெடுக்கக்கூடிய விவகாரம் அல்ல என்பதால் நிதி அமைச்சுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
முன்னதாக அமல்படுத்தப்பட்ட GST முறையிலிருந்து பெறப்பட்ட அனுபவங்கள், அந்த வரி முறையில் எதிர்கொள்ளப்பட்ட சிக்கல்கள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள SST முறையில் காணப்படும் குறைபாடுகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆய்வு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

