
கோலாலம்பூர் செப் 5-
முடித்திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய
தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் அனுமதி கிடைத்திருப்பது சமுதாயத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் மனிதவள அமைச்சு கவனம் செலுத்துவோம்.
மனிதவள அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின் அந்நிய தொழிலாளர் விவகாரங்களுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என சபதம் எடுத்து கடுமையாக போராடியதாக அவர் சொன்னார்.
இதன் அடிப்படையில் கட்டங்கட்டமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு வந்தது.
பொற்கொல்லர், ஜவுளி, முடித் திருத்துவது ஆகிய மூன்று தொழில்துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.

இருந்தாலும் உள்துறை அமைச்சு, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
தற்போது இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த பிரச்சனைக்கு ஒப்புதல் பெற வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது.
இந்நிலையில் பிரிக்பீல்ட்ஸ் வணிக தளத்திற்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மூன்று தொழிற்துறைகளுக்கும் உடனடியாக அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.
பிரதமரின் இந்த அறிவிப்பு தீபாவளி நேரத்தில் இந்திய சமுதாயத்திற்கான மிகப்பெரிய பரிசாக உள்ளது.
இனி அந்நிய தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கான விவகாரங்களில் மனிதவள அமைச்சு கவனம் செலுத்த உள்ளது.
இது எப்படி இருந்தாலும் இந்த மூன்று தொழில் துறைகளுக்கும் விரைந்து அந்நிய தொழிலாளர்களைப் பெற்று தருவது தான் எனது இலக்காக இருந்தது என்று நேற்று இந்திய வர்த்தக தொழில் துறை சங்கத்தின் பொறுப்பாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

