

கோலாலம்பூர் மார்ச் 11 –
சரியாக 15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 13,000 மேல் எட்டி சாதனை படைத்திருக்கிறது என்று சமூக போராளி அருண் துரைசாமி தெரிவித்தார்.
இன்று நாடு தழுவிய அளவில் பள்ளிகள் திறக்கப்பட்ட வேளையில் 530 தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் ஆண்டில் 13,319 மாணவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 12,471 மாணவர்கள் பதிந்தனர்.
சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு என்ற பிரச்சாரம் வழி இந்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை 13,319ஆக எட்டியுள்ளது .கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 848 மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
15 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 13,000 மேல் எட்டியுள்ளது மிகப்பெரிய சாதனையாக உள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று காலையில் நெகிரி செம்பிலான் பகாவ் லாடாங் கெடீஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்றேன்.ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பிய செய்தியை கேட்டு உள்ளம் பூரித்து போனது என்று அவர் சொன்னார்.
மலேசிய திருநாட்டில் தாய்மொழி பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று அண்மையில் ஃபெடரல் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பானது இந்திய பெற்றோர்கள் மத்தியில் புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக பெற்றோர்கள் இன்று தமிழ் பள்ளிகள் மீது முழு நம்பிக்கை வைத்து தங்களது பிள்ளைகளை அனுப்பி இருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்

