
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 7-
PH தலைமையிலான அரசாங்கத்தின் ஐந்து தோட்டத் தொழிலாளர்களின் வீட்டைப்பு திட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
எனினும், வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில வருடங்கள் ஆகும் என்பதால் வெறும் அறிவிப்பு மட்டத்திலேயே உள்ளது என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
இந்தத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வீட்டு உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான முடிவை வரவேற்கும் அதே வேளையில், அந்தத் திட்டம் உரிய காலத்தில் முடிக்கப்படும் என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது என்று அவர் சொன்னார்.
பல்வேறு பிரச்னைகளால் திட்டம் தடம் புரளும் வாய்ப்பு உள்ளது. அமலாக்கத்தின் போது PH தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் இருக்குமா என்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக காத்திருக்கும் இந்தத் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் இந்த விவகாரத்தில் தீவிரம் குறித்து சட்டப்பூர்வ அறிவிப்பு (statutory declaration (SD)) வடிவத்தில் அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் கிடைக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கையெழுத்திட்ட எஸ்டியை அரசாங்கத்தால் வழங்க முடியுமா என்பதும் கேள்விக் குறியே என்றார் அவர்.
நாட்டிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு உரிமைத் திட்டம் அரசாங்கம் மற்றும் தோட்ட உரிமையாளர்களிடமிருந்து உரிய கவனத்தைப் பெறவில்லை என்று அவர் சுட்டி காட்டினார்.

