
ஈப்போ,ஜூன்14: ஈப்போவில் ஜூலை திங்கள் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு சிறப்புடன் அதன் இலக்கை எட்ட பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் வாழ்த்து தெரிவித்தார்.
ஈப்போவில் எல்லா கால கட்டத்திலும் தமிழ் மணம் பரப்பிட தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை முன்னெடுத்து வரும் ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தையும் அதன் நிர்வாகத்தினரையும் பாராட்டிய சிவகுமார் இம்மாநாடு சிறப்புடன் நடைபெற தன்னால் இயன்ற பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
ஓர் அமைப்பு அதன் நோக்கத்தில் தெளிவாக பயணிப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறிய அவர் மாநாடு சிறப்பாக நடைபெற தனது பங்களிப்பாக வெ.10 ஆயிரம் மானியமாய் வழங்கினார்.
இம்மன்றத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் தாம் நன்கு அறிவேன் என்றும் இவர்களின் மொழி,இனம்,சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் நம் சமூகத்தின் இன்றைய தேவைகளில் இன்றியமையாதது என்றார்.
ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது இம்மன்றத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு ஆதரவளித்து மானியம் வழங்குவதோடு ஆலோசனைகளை வழங்கி வரும் மாண்புமிகு சிவகுமாரின் சேவையும் பங்களிப்பும் காலத்தால் போற்றுதல்குரியது என அதன் தலைவர் எழுத்தாளர் டாக்டர் அருள்.ஆறுமுகம் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு ஆண்டும் மன்றத்தில் நிகழ்ச்சிகளுக்கும் மாநாடுகளுக்கும் முன்னாள் மனிதவள அமைச்சரின் பங்களிப்பு இன்றியமையாதது.அவர் இம்மன்றத்தின் வளர்ச்சியிலும் அதன் செயல்பாடுகளிலும் மிக முக்கியமானவரும் கூட என கவிஞருமான அருள்.ஆறுமுகம் மேலும் கூறினார்.
நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது மன்றத்தின் நிர்வாகத்தினர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்ட வேளையில் மாண்புமிகு சிவகுமார் அவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

