

ஈப்போ, ஜுன். 15-: பேராக் மாநில இந்திய பூப்பந்து மன்றம் சிறப்பாக தங்களுடைய 45 வது ஆண்டாக இந்த பூப்பந்து போட்டியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இவ்வாண்டு 760 விளையாட்டாளர்கள் கலந்துக்கொண்டு ஆதரவு வழங்கியுள்ளதாக இந்த போட்டியை தொடக்கிவைத்த போது பினாங்கு மாநில முன்னாள் போலீஸ்படை தலைவர் டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகன் கூறினார்.
இந்த பூப்பந்து விளையாட்டு இந்திய நாட்டில் உருவானதாகும். அதன் பெயர் ” புனா” என்று அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் இந்த பூப்பந்து விளையாட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.அதன் பின், பேட்மிண்டன் என்ற பெயர் உருவாகியுள்ளது என்று வரலாற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பூப்பந்து போட்டியில் இந்தியர்கள் ஈடுபாடு அதிகரிக்க வேண்டும். அதன் அடிப்படையில் இதுபோன்ற விளையாட்டு மன்றங்கள் ஏற்பாடு செய்யும் போட்டிகளில் கலந்துக்கொண்டு அனைத்துலக ரீதியில் மிளிர வேண்டும்.
இம்மாதிரியான விளையாட்டில் கலந்துக்கொண்டு செயல்படுவது ஆரோக்கியமான பண்புநலன்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாட்டிலுள்ள அனைத்து இந்திய இளைஞர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.
இங்கு விளையாடியவர்கள் தற்போது நம் நாட்டை பிரதிநிதித்து வருகின்றனர் என்பது பெருமையாகவுள்ளதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவரும், பேராக் இந்திய பூப்பந்து சங்கத்தின் தலைவருமான லோகநாதன் நாகப்பன் கூறினார்.
மூன்று நாட்களாக நடைபெறும் இப்போட்டியில் 10 வயது முதல் 70 வயது வரை போட்டியாளர்கள் கலந்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதோடு 25 பிரிவாக வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. ஆகவே, இம்மாதிரியான விளையாட்டு மன்றங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்று அவர் கருத்துரைத்தார்.
இந்தப்போட்டிக்காக டத்தோஸ்ரீ ஆ.தெயவீகன் 2 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியதற்கு என்.லோகநாதன் தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

