
கோலாலம்பூர் ஜூன் 27-
நெரிசல் மிகுந்த பகுதி என்பதை தெரிந்து கொண்டும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி அருகிலேயே வீடுகளைக் கட்ட மேம்பாட்டாளருக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி இன்று கேள்வியை எழுப்பினார்.
திட்டமிடல் மற்றும் கட்டிட அனுமதியின் ஒப்புதலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கின்ராரா தோட்டத் தமிழ்ப்பள்ளி இருப்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.
உண்மை அப்படியிருக்க, ஒரு பொறுப்பான DBKL மேம்பாட்டாளரின் வீட்டுடைமைத் திட்டத்தை நிராகரித்திருக்க வேண்டாமா? என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.
DBKL ஏன் அனுமதி வழங்கியது அல்லது பள்ளியின் சில பகுதிகள் புதிய பகுதிக்கு மாற்றப்பட்டால் அனுமதி வழங்கும் பணியில் ஏன் இறங்கியது?
இரண்டாவதாக, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் எம்.பி.க்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் ஏன் இந்த பரிந்துரையை எதிர்க்கவில்லை.
அவர்கள் மேம்பாட்டாளர் மற்றும் DBKL -யா அல்லது 700 மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளியின் நலன் மற்றும் நல்வாழ்வை பிரதிநிதிக்கிறார்களா?
இன்று வரை தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழ்ப் பள்ளியின் சில பகுதிகள் இடமாற்றம் செய்யப்படுவதை எதிர்த்து வாயே திறக்கவில்லை.
கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா தமிழ்ப்பள்ளியின் சில பகுதிகளை மாற்றுவது பற்றி எதுவும் கூறவில்லை.
அவர் விரும்பினால், பள்ளி வளாகத்தில் கைவைக்க வேண்டாம் என்று DBKL-க்கு அவர் எளிதாக அறிவுறுத்தியிருக்கலாம்.
தேசியப் பள்ளியாகவோ அல்லது மிகப் பெரிய அரசு வளாகமாகவோ இருந்திருந்தால், இடமாற்றத்துக்கு சம்மதித்திருப்பாரா?
சிலாங்கூரில் PH தலைமையிலான MPக்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எக்ஸ்கோ உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிய மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இடமாற்றத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா?
இல்லையென்றால், இந்த விஷயத்தில் அவர்களின் மெவுனம் களைய வேண்டும் என்றார் அவர்.

