
புத்ராஜெயா, ஜூலை 16 – செயற்கை நுண்ணறிவைப் (ஏ.ஐ.) பயன்படுத்தி
உருவாக்கப்படும் காணொளிகள் மற்றும் படங்களை பகிரும் புதிய
மோசடிக்கு எதிராக விழிப்புடன் இருக்கும்படி பொது மக்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் மேம்பாட்டிற்கு செயற்கை நுண்ணறிவு பெரிதும் துணை புரிந்த
போதிலும் சில தரப்பினர் அந்த தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி
வருவதாக தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
தாம் பேசுவது போன்ற வாட்ஸ்ஆப் காணொளி ஒன்று தமக்கு கிடைக்கப்
பெற்றதாகவும் எனினும் அது டீப்ஃபேக் எனும் போலிப் பதிவு என்றும்
டத்தோஸ்ரீ சித்தி நுர்ஹலிசா சில தினங்களுக்கு முன்னர் தனது
இண்ட்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
நல்ல காரியங்களுக்கும் தீய காரியங்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம்
பயன்படும். நமக்கு கிடைக்கும் காணொளிகள் குறித்து எச்சரிக்கையாக
இருக்கும் அதேவேளையில் அவை உண்மையானவையா அல்லது ஏ.ஐ.
செயலி மூலம் உருவாக்கப்பட்டவையா என்பதை ஆராய வேண்டும் என
அவர் கேட்டுக் கொண்டார்.

