
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 300க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டுமில்லாமல் புறப்பாட நடவடிக்கைகளிலும் தங்களது தனித்திறனை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில் இவ்விளையாட்டுப் போட்டி ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது
70 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் நேரோட்டம், 4X100 மீட்டர், 4X200 மீட்டர் அஞ்சல் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற திடல்தட போட்டிகளும் குழு விளயாட்டுகள், முன்னாள் மாணவர்களுக்கான போட்டிகள், பெற்றோர்களுக்கான போட்டிகள் என பல போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த போட்டிகளில் ஏறக்குறைய 100க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்து தங்கள் திறமையைக் காட்டினர்.
முன்னதாக, மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. செல்கோம் (Celcom), டீஜி (Digi) மற்றும் ரேட் ஒன் (Red One) என்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பிரதிபலிப்பது போல் உடை அணிந்து அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு.கண்ணன் சுப்ரமணியம் வரவேற்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியர் உயர்திரு சிவகுமார் வெள்ளைசாமி அவர்கள் திறப்புரையாற்றி 48ஆம் ஆண்டுப் பள்ளி விளையாட்டுப் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
தலைமையாசிரியர் தமதுரையில், மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்க பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தங்கள் பிள்ளைகளை முறையாகப் பயிற்சிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இப்பள்ளி விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடந்தேற அயராத உழைப்பை வழங்கிய ஆசிரியர்களுக்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தலைமையாசிரியர் உயர்திரு சிவகுமார் வெள்ளைசாமி அவர்கள், இப்பள்ளி விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகளையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
திறப்புரைக்குப் பின் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மஞ்சள் இல்லம் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாத் தேர்வு பெற்றனர்.

