


செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர்: ஜுலை 26-
மலேசிய தேசிய வர்த்தக மற்றும் தொழிலியல் சம்மேளனத்தின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் முதல் மலேசிய சாதனைத் தமிழராக இவர் விளங்குகிறார்.
மேலும் மைக்கி தலைவர் ஒருவருக்கு இந்த முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது இதுவே மலேசிய வரலாற்றில் முதல் முறையாகும்.
மலேசியா தொழில் துறை வர்த்தக சம்மேளனத்தின் 48ஆவது பேராளர் மாநாடு அதன் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ சோ தியான் லாய் தலைமையில் இன்று நடைபெற்றது.
உற்பத்தி தொழில் துறை சம்மேளனம், மலாய் வர்த்தக சம்மேளனம், அனைத்துலக வர்த்தக சம்மேளனம், மலேசிய இந்தியர் வர்த்தக தொழில் துறை உட்பட 5 சம்மேளனங்கள் மலேசிய சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளன.
இன்று நடைபெற்ற பேரவையில் மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை முன்னிட்டு மலேசிய இந்தியர் தொழில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் சுரேந்திரன், துணை செயலாளர் ஞானசம்பந்தன் ஆகியோர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மலேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் செயலாளராக ஞானசம்பந்தன், உதவித் தலைவராக ஷாம் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்முறை மொத்தம் 3 இந்தியர்கள் தேசிய அளவில் இடம் பிடித்திருப்பது மிகவும் பாராட்டுக்குறியது.
இதனிடையே, இதற்கு முன்னர் அரசாங்கத்தின் பார்வைக்கு மைக்கியின் சார்பில் இந்திய வர்த்தகர்களின் பிரச்சினைகளை கொண்டு சென்று வந்தேன்.
இப்போது 5 சங்கங்களின் பிரச்சினைக்கு குரல் கொடுப்பேன். குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

