
மா. பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஜூலை 28-
வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி மைபிபிபி கட்சியின் தேசிய பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் உலக வாணிப மையத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் 1,500 பேராளர்கள் எந்த கூட்டணிக்கு ஆதரவு தருவது தொடர்பில் வாக்களிப்பார்கள்.
அன்றைய தேதியில் மைபிபிபி கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது திட்டவட்டமாக தெரிந்து விடும் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
காலங்காலமாக நாங்கள் தேசிய முன்னணியை ஆதரித்து வருகிறோம்.
ஆனால் நாங்கள் தேசிய முன்னணியில் இருக்கிறோமா அல்லது இல்லையா என்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவை தேசிய முன்னணி அறிவிக்கவில்லை.
இந்நிலையில் மைபிபிபி கட்சியின் தன்மானம் காக்க முடிவை எடுக்கும் தருணம் வந்துவிட்டது என்று அவர் சொன்னார்.
மைபிபிபி கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளும் படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உட்பட ஆளும் கட்சி எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பை விடுத்துள்ளோம்.
எங்கள் அமைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை சிறப்பு செய்வோம்.
இந்த நாட்டில் மிகவும் பாரம்பரியமிக்க கட்சியாக மைபிபிபி வழங்குகிறது.
நாங்கள் ஒன்றும் தலையாட்டி பொம்மைகள் அல்ல. முட்டாள்களும் அல்ல.
இவ்வளவு நாள் அனைவரையும் அரவணைத்து சென்றோம். ஆனால் இப்படியோ எங்களால் இருக்க முடியாது
முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் மைபிபிபி கட்சி இருக்கிறது என்று இன்று நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்திற்கு பிறகு ஊடகவியலாளரிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கட்சி சின்னம் உட்பட சட்டத்தில் பல திருத்தங்கள் செய்வது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
இன்று நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தில் மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன், இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

