
ஈப்போ, ஆக.12-
ஆறாவது ஆண்டாக பேராக் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கபடி பயிரங்கமும், போட்டியும் சிறப்பாக நடந்தேறியது.
இவ்வாண்டு 32 குழுக்கள் பங்கேற்றன. அவற்றில் 24 ஆண்கள் குழுக்களும், 8 பெண்கள் குழுவும் பங்கேற்றன என்று பேராக் மாநில இளைஞர் மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் கோ. சண்முகவேலு கூறினார்.
தற்போது கபடி விளையாட்டு அனைத்துலக ரீதியில் அங்கீகாரம் பெற்று இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டாக உலகை வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
இந்நாட்டில் இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே இவ்விளையாட்டை அறிமுகம் செய்து திறமையான சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இந்த கபடி பயிலரங்கமும், போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இளைஞர்கள் தீயவழிகளுக்கு செல்லாமல் இருக்க இந்த கபடி விளையாட்டு ஆரோக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பேருதவியாக அமையும். இவர்கள் மாநில ரீதியில் சுக்மா போட்டி மற்றும் தேசிய ரீதியில் மிளிரவும் பின் நாட்டை பிரதிநிதித்து அனைத்துலக ரீதியில் விளையாடவும் வாய்ப்புகள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாண்டு நடைபெற்ற தொடக்க விழாவில் டத்தோ எம். அசோஜன் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்டு 5 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து பேராக் மந்திரி பெசாரின் அரசியல் செயலாளர் முகமட் ஹம்டி பஹாருடின் நிகழ்வை தொடக்கி வைத்தபோது நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இந்த பிரமுகர்கள் அனைவருக்கும் அவர் தம் இயக்கத்தின் சார்பில் சண்முகவேலு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் கபடி விளையாட்டை அனைத்து சமூகத்தை சேர்ந்த விளையாட்டாளர்கள் விளையாட வரவேற்கப் படுகின்றனர்.
இத்தகைய போட்டி விளையாட்டு வாயிலாக ஒற்றுமை, சுபீட்சம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, புரிந்துணர்வு போன்ற உணர்வுகளை மையப்படுத்த ஏதுவாக அமையும் என்று அவர் கருத்துரைத்தார்.

