
பலாக்கோங், ஆக. 13-
பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தினால் பிள்ளைகள் பள்ளிக்குப் போகாமல் இருப்பது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு
தெரிவித்தார்.
“ திறமையும் ஆற்றலும் கொண்ட சிறார்கள் கல்வி கற்க முடியாமல் போவது அவர்களின் எதிர்காலத்தியே பாழ்படுத்துகிறது . இதனைக் கருத்திற் கொண்டு மாநில அரசாங்கம் மை செல் திட்டத்தின் வழி இப்பிரச்சனைக்குத் தீர்வு காண தற்போது முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறது” என்றார் .
‘மைசெல் ‘வழி பிறப்பு பத்திரம், குடியுரிமை பிரச்னை, சிவப்பு அடையாள கார்டு போன்றவற்றிற்கு மாநில அரசாங்கம் தீர்வு கண்டு வருகிறது என்று பலாக்கோங்
இந்திய சமூக தலைவர் கிறிஸ்டி ஏற்பாட்டில் இங்குள்ள ஸ்ரீ பூலாய் அடுக்குமாடி குடியிருப்பு மண்டபத்தில் நடைபெற்ற
மருத்துவ பரிசோதனை மற்றும் சமூக சேவைகளுக்கான முகாமில் சிறப்புரை ஆற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷரிஷான், உலுலங்காட் தகவல் பிரிவு அதிகாரி சலாஹூதீன் கியாவான் ஆகியோரும் வருகை புரிந்தனர்.
இந்த முகாமில் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் மாரடைப்புக்கான இலவச தொடக்க கட்ட பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
மைசெல், சமூக பாதுகாப்பு போன்ற சேவைகளுக்கும் சுற்றுவட்டார மக்கள் தங்களைப் பதிந்து கொண்டனர்.

