
கோலாலம்பூர் ஆக 18-
நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டு ஆடி மாதம் 31 ஆம் தேதி ( நேற்று 16-8-2024) துவாதசி திதியும் பூராடம் நட்சத்திரமும் வரலட்சுமி விரதமும் கூடிய ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை பூஜை செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் 108 சங்க அபிஷேகம் மற்றும் சண்முகார்ச்சனைகளுடன் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்கு சங்காபிஷேகம், 3.00 மணிக்கு அபிஷேகம், 5.30 மணிக்கு நித்திய பூஜையும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து
மாலை 6:00 மணிக்கு சண்முகார்ச்சனையும் தீபாராதனையும் இடம் பெற்றது.
இந்த பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்பட்டது.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் குடும்பத்தின் சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையை செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத் தலைமை குருக்கள் மணிவண்ணன் சிறப்பாக நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

