

பத்து காஜா,செப்24 : பத்து காஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்டு அமைந்திருக்கும் கம்போங் பெம்பான் கே.ஆர்.தி குடியிருப்பின் ஜனத்தூல் பிடாவுஸ் மசூதியை சீரமைக்கவும் அதனை நன்நிலைக்கு மேம்படுத்தவும் தாம் வெ.34 ஆயிரத்தை மானியமாக வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் தெரிவித்தார்.
சம்மதப்பட்ட மசூதியை சீரமைக்கவும் மேம்படுத்தவும் அதன் நிர்வாகத்தினர் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தாம் அந்த மானியத்தை ஒதுக்கியதாகவும் கூறிய அவர் தற்போது சம்மதப்பட்ட மசூதியில் அதன் சீரமைப்புப் பணிகளோடு மேம்பாடுகளும் நிறைவாக செய்து முடிக்கவும் பட்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
தற்போது பார்ப்பதற்கு அழகாகவும் செழிமையோடும் காட்சியளிக்கும் அந்த மசூதியில் பெயர்பலகை,சுற்றுப்புற சீரமைப்பு,தார்சாலை அமைத்தல் உட்பட பல்வேறு சீரமைப்புப் பணிகள் ஆக்கப்பூர்வமாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும்,மடானி அரசாங்கத்தின் கீழ் சமயம்,மதம்,இனம்,மொழி என அனைத்தும் பாகுபாடு இன்றி காக்கப்பட்டு வருதை இது குறிப்பதாகவும் இந்நாட்டில் அனைத்து இனமக்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் அரசு தொடர்ந்து வலுவான ஆதரவையும் பங்களிப்பையும் செய்து வருவதையும் அனைத்து வழிபாடு தலங்களுக்கும் தேவையான உதவிகளை செய்து வருவதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டும் வருவதாக அவர் மேலும் கூறினார்.
சிறந்த நிலையில் சீரமைப்பும் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மசூதியில் தொடர்ந்து சமயம் சார்ந்த நிகழ்ச்சிகள்,வகுப்புகளோடு சமூகவியல் சார்ந்த நடவடிக்கைகளும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக எல்லா காலக்கட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காண்பித்த சிவகுமார் பல்லினம் வாழும் நாட்டில் ஒவ்வொரு இனமும் மதமும் அவர்களின் நம்பிக்கை சார்ந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு உரிமை கொண்டவர்களே என்றார்.
அவர்களுக்கு தேவையான மற்றும் அடிப்படையிலான வசதிகளையும் மானியங்களையும் கொடுத்து அது சரிவர இயங்குவதையும் புரிந்துணர்வோடும் ஒற்றுமையோடும் மட்டுமின்றி நல்லிணக்கத்தோடும் பயணிப்பதை மக்கள் பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில்,பத்து காஜா நாடாளுமன்றத்தில் தாம் இனம்,மொழி,மதம் கடந்து அனைத்து மக்களின் நலனிலும் அவர்களின் நம்பிக்கை சார்ந்த விடயங்களிலும் பெரும் பங்களிப்பு செய்து வருவதாகவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஒப்ப அனைத்து தேவைகளையும் தொடர்ந்து மேற்கொண்டும் வருவதாக குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி,மலேசியா மடானி கோட்பாட்டுக்கு ஒப்ப அனைத்து மக்களின் நலனிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதோடு அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் சமய நல்லிணக்கமும் புரிந்துணர்வும் சமூகப்பாலமாக அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்த சிவகுமார் பத்து காஜா நாடாளுமன்றத்தில் இதனையே தாம் வலியுறுத்தி மக்களை ஒன்றுப்படுத்தியும் வருவதாக கூறினார்.

