
கோலாலம்பூர்,செப்27: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் “தான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2024” வருகின்ற 04.10.2024இல் நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் திரு.மோகனன் பெருமாள் குறிப்பிட்டார்.
இப்பரிசளிப்பு விழா கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தனில் அமைந்திருக்கும் தான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் மாலை மணி 6.00 தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மேலும்,இவ்வாண்டு சிறுகதைத் தொகுப்பு நூல்களுக்கான பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
புத்தகப்பரிசளிப்பு விழாவின் வெற்றியாளர்களின் பெயர்கள் நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படும் என்பதையும் நினைவுறுத்திய மோகனன் பெருமாள் போட்டியில் பங்கேற்ற எல்லாப் போட்டியாளர்களையும் இப்பரிசளிப்பு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்தார்.
இப்பரிசளிப்பு விழாவிற்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் பத்துமலை தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பும் படைப்பும் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

