
தஞ்சோங் மாலிம்,செப்27: வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் சுமார் 8000 வணிக தலங்களில் நெகிழி பயன்பாடு இருக்காது என வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஙா கோர் மிங் அறிவித்திருப்பதை தஞ்சோங் மாலிம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சிவகுமார் வரவேற்றார்.
அமைச்சரின் இந்த விவேகமான முடிவும் தூரநோக்கு பார்வையும் நாட்டின் சுற்றுச்சூழலை வருங்காலத்தில் காத்திடும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
நடப்பில் நாட்டில் நெகிழி பயன்பாட்டை குறைக்க ஒவ்வொரு ஊராட்சி மன்றமும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் அமைச்சரின் இந்நடவடிக்கை இத்திட்டத்தை ஆரோக்கியமான இலக்கை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நாளைய தலைமுறைக்கு இந்த உலகை குறிப்பாக நம் நாட்டையும் மண்ணையும் வளமாக விட்டுச் செல்ல அமைச்சரின் இந்த முன்னெடுப்பு பெரும் பங்காற்றும் என்பதில் துளியும் ஐயமில்லை என்றார்.
மேலும்,தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்றம் நெகிழி பயன்பாட்டை குறைக்க அதுசார்ந்த திட்டங்களையும் பிரச்சாரங்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவதையும் கவுன்சிலர் சிவகுமார் சுட்டிக்காண்பித்தார்.
கடந்தக் காலங்களில் கொள்கை அளவில் இருந்த நெகிழி பயன்பாட்டை குறைக்கும் செயல்பாடு தற்போது அமைச்சரின் முயற்சியில் ஒப்பந்தமாய் உருவெடுத்திருப்பது பெரும் வரவேற்ப்பிக்குரியத்கு என்றார்.
வணிகர்கள் மட்டுமின்றி பொது மக்களும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கினால் இத்திட்டம் அதன் இலக்கை எட்டும்.பொது மக்களும் நெகிழி பயன்பாட்டை குறைக்க முன் வரவேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

