


பத்தாங் காலி ஜூலை 28
ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று அதற்கான உரிய கடிதங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொண்டு தங்களது எதிர்காலத்தையும் வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று மனித வள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராய்டு வீரமான் வேண்டுகோள் விடுத்தார்.
பத்தாங் காலி சமூக மண்டபத்தில் இரு தினங்களாக நடை பெற்று வரும் ஜோப் கேர் சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த அவர் மேற்கண்ட கருத்தை முன் வைத்துப் பேசினார்.
வேலை வாய்ப்பு கண்காட்சியில் ஏறக்குறைய 163 வேலைகள் இடம் பெற்றுள்ளதாக அவர் கூறினார். தரமான வேலையாக அமைந்திருப்பதுடன் 6 ஆயிரம் ரிங்கிட் வரை மாத வருமானத்தை நேர் காணலில் தேர்ச்சிப் பெற்றவர்கள் பெற முடியும் என்றும் பந்திங் சட்ட மன்ற உறுப்பினருமான பாப்பா ராய்டு நம்பிக்கைத் தெரிவித்தார்.
நேர்முகத் தேர்வில் 70 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதே வேளையில், வேலை வாய்ப்பை ப் பெற்றவர்களுக்கு சொக்சோ சலுகையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இதை வழி நடத்திய செரி கார்ப்பரேட் நிறுவனத்திற்கு பாப்பா ராய்டு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

