
கோலாலம்பூர் ஜூலை 28-
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (MITRA) நிதி விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறி, மஇகா (MIC) கட்சியின் தலைவர்கள் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் 7 முக்கியத் தலைவர்கள் ‘பெர்சத்துவான் ஜாலினான் பெர்பாடுவான் நெகாரா மலேசியா’ (Persatuan Jalinan Perpaduan Negara Malaysia) அமைப்பின் தலைவர் சைட் இம்ரான் சைட் அப்துல் அஜீஸ் (Syed Imran Syed Abdul Aziz). மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மித்ரா நிதி குறித்து டிக்டாக்கில் (TikTok) வெளியிடப்பட்ட மூன்று காணொளிகள் மஇகா தலைவர்கள் மத்தியில் அவதூற்றைச ஏற்படுத்தியதாககூறி ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சைட் இம்ரான் இன்று ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
சமீபத்தில் விமர்சிக்கப்பட்டுள்ள சிவில் நடவடிக்கை தொடர்பாக நான் பின்வருமாறு விளக்க விரும்புகிறேன்:
- நோக்கம்
SEED, SEDIC மற்றும் MITRA தொடர்பான அறிக்கைகள் மற்றும் காணொளிகள் அனைத்தும் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார முன்னேற்றம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வளர்ச்சி குறித்து கேள்விகளை எழுப்பும் நோக்கத்திற்காகவே வெளியிடப்பட்டவை.
அவை எந்தவொரு தனிநபரையும் அவதூறு செய்யவோ அல்லது தாக்கவோ நோக்கமுடையவை அல்ல.
- எந்த தனிநபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை
இந்த வழக்கில் எந்த மனுதாரரின் பெயரும் குறிப்பாக சொல்லப்படவில்லை.
அறிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் அறிய வேண்டிய அடிப்படை விஷயங்களான பொது நிதி பயன்பாடு மற்றும் இந்திய சமூகத்திற்கான திட்டங்களின் செயல்திறன் பற்றியவையாகும்.
- முக்கிய பிரச்சினை
முக்கியமாக எழுப்பப்பட்டுள்ள கேள்வி என்னவென்றால், அரசு ஒதுக்கிய நிதி உண்மையில் குறித்த இலக்கு மக்களைச் சென்றடைந்ததா? மேலும், இந்திய சமூகத்திற்கு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தியதா? என்பதாகும்.
- அனைத்து அரசுகளின் பொறுப்பு
இது MIC அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் குறிக்கும் பிரச்சினை அல்ல.
முன்னைய அனைத்து அரசுகளும், அதில் BN, PH மற்றும் PH–BN கூட்டணி ஆட்சியும் உட்பட, இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
- இந்திய சமூகத்தின் நிலை
இன்றளவும் பல குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து, அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளனர்.
இந்த நிலை, ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இருந்தபோதிலும், பலர் இன்னும் நிலையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை அடையவில்லை என்பதை காட்டுகிறது.
- மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு
பொது நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது மற்றும் அரசுத் திட்டங்கள் எவ்வளவு பயனளித்தன என்பதை மக்கள் கேள்வி கேட்பது அவர்களின் உரிமையாகும்.
அரசியல்வாதிகள் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.
- நீதிமன்ற நடைமுறைக்கு மரியாதை
நடந்து கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்கை நான் மதிக்கிறேன். மேலும், ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவிப்பதை விட நீதிமன்றத் தீர்ப்பை காத்திருக்க விரும்புகிறேன்.
அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சட்ட நடைமுறையின் மூலம் பதிலளிக்கப்படும்.
- எனது நிலைப்பாடு
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் இந்திய சமூகத்திற்கும் மலேசிய மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற முயற்சியை நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்.
குற்றச்சாட்டுகள் எழுப்புபவர்கள் யார் என்பதல்ல முக்கியம்; நிதி மற்றும் திட்டங்கள் உண்மையில் தேவையுள்ள மக்களை சென்றடைந்ததா என்பதே முக்கியம்.
இந்த விவகாரத்தை ஊடகங்கள் நியாயமான, துல்லியமான மற்றும் சமநிலையான முறையில் செய்தியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
சையத் முஹம்மது இம்ரான் பின் எஸ். என். சையத் அப்துல் அஸிஸ்
தலைவர்
மலேசிய தேசிய ஒற்றுமைப் பாதை அமைப்பு (PIPNM)
தொலைபேசி: 017-358 9864

