
கிள்ளான், அக். 19- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்
நடைபெறும் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரம் பாடல் திறன் போட்டியின்
இறுதிச் சுற்றுக்கு பத்து போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.
இப்போட்டியாளர்கள் அனைவரும் புக்கிட் ஜாலில் அரங்கில் வரும்
அக்டோபர் மாதம் 27ஆம் இறுதிப் போட்டியில் களம் காணவுள்ளனர்.
நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இப்போட்டியில் 178 பேர் பங்கு
கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தியதாக செந்தோசா
சட்டமன்ற உறுப்பினர் ஜி. குணராஜ் கூறினார்.
இரு வாரங்களுக்கு முன்னர் கிள்ளானில் நடைபெற்ற அரையிறுதிச்
சுற்றில் இருபது பேர் தேர்வான வேளையில் அவர்களில் பத்து பேர் கடந்த
வாரம் நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்
என்று அவர் தெரிவித்தார்
இந்த பத்து போட்டியாளர்களும் கலந்து கொள்ளும் இறுதிச் சுற்றுப்
போட்டியை புக்கிட் ஜாலில் அரங்கில் வெகு சிறப்பாக நடத்தவிருக்கிறோம்.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொள்ள மாநில மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அவர்
சொன்னார்.

