


கோப்பெங், நவ.10: இங்குள்ள கோப்பெங் தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டடம் விரைவில் கட்டப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இப்பள்ளி புதிய கட்டடத்தில் விரைவில் செயல்படும். கரையான் அரிப்பால் தற்போதய பள்ளி பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கோப்பொங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தான் கா இங் இத்தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டபோது இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பு செய்தார்.
அதுமட்டுமின்றி, இங்குள்ள கோபிசானில் செயல்பட்டு வரும் இந்து இடுகாட்டில் தற்போது பிரேதங்கள் தகனம் செய்ய ஒரு இடம் மட்டுமே உள்ளது.
மக்கள் தேவையின் அடிப்படையில் மேலும் ஒரு தகனம் செய்யும் இடத்தை அங்கேயே நிலத்தை அடையாளம் கண்டு நிர்மாணிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோப்பெங் தமிழ்ப்பள்ளி கட்டடம் கரையான் அரிப்பால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவதோடு இவ்விவகாரம் குறித்து பேராக் பொதுப் பணித்துறையினர் நேரடி ஆய்வு மற்றும் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் இப்பள்ளி பாதுகாப்பு மற்றும் நீண்ட நாள் பயன்பாட்டுற்கு ஏற்றதல்ல என்ற அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய மடானி ஒற்றுமை அரசாங்கம் சிறப்பாக மக்களின் தேவையை அறிந்து செயல்பட்டு வருகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவம் சிறந்த அரசியல் நிலைத்தன்மையை நிலைநாட்டி வருகிறது.
இதனை தற்போதைய பொருளாதார உருமாற்றம் வாயிலாக மக்கள் காண முடிகிறது என்று அவர் கூறினார்.
இருப்பினும் இந்நாட்டின் பொருளாதாரம், ஒற்றுமை மற்றும் சுபீட்சத்தை சீர்குலைக்கும் பொருட்டு ஒரு சில எதிர்கட்சி தரப்பினர் பொறுப்பற்ற முறையில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
தங்களின் சுயநலத்திற்காக இந்நாட்டின் அமைதியையும், மேம்பாட்டையும் சீர்குலைக்க பல உண்மையற்ற தகவல்களை பரப்ப முயல்வது அறிவீன செயலாகும் என்று அவர் சாடினார்.
இந்நிகழ்வின் நிறைவு விழாவில் வருகையாளர்கள் அனைவருக்கும் அன்பளிப்பு, அதிர்ஷ்ட குலுக்கல் பரிசுகள் மற்றும் இரவு விருந்தோம்பலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் எஸ்.சண்முகம் மற்றும் அவர் தம் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேனாள் கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் லீ பூன் சாய், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தான் கா இங், தேஜா சட்டமன்ற உறுப்பினர் ஆட்சிக்குழு உறுப்பினர் சந்தரா இங், சிம்பாங் பூலாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் சாய் இ முக்கிய பிரமுகர்களாக பொதுமக்களுடன் கலந்துக் கொண்டனர்.

