
டெக்சாஸ்: நவ 28-
ஜேக் பாலுடன் நடந்த குத்துச் சண்டை போட்டியில் தோற்றாலும், வெற்றி பெற்றதை போன்ற அசாத்திய மனநிலையில் உள்ளதாக, குத்துச் சண்டை ஜாம்பவான் மைக் டைசன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் டைசன் – ஜேக் பால் இடையே 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் தலா 2 நிமிடம் கொண்ட 8 ரவுண்டு போட்டி நடத்தப்பட்டது.
உலகமே பெரும் ஆவலோடு ஏதிர்பார்த்த இந்த சண்டையில் புள்ளிக் கணக்கில் மைக் டைசன் தோல்வி கண்டார்.
தோற்றதில் எனக்கு துளியும் வருத்தமில்லை. உண்மையை சொல்வதென்றால், கடந்த ஜூன் மாதம், உடல் நலக்குறைவால் நான் அநேகமாக இறந்தே போய் விட்டேன் எனலாம்.
8 முறை எனக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. 12 கிலோ எடை குறைந்தேன். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற கடுமையாக போராட வேண்டி இருந்தது.
என் வயதில் பாதி வயதுடைய, திறமையான குத்துச் சண்டை வீரர் ஜேக் பாலுடன், அரங்கம் முழுதும் நிறைந்திருந்த ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே, என் குழந்தைகள் முன்னிலையில் 8 ரவுண்டுகளையும் முழுமையாக போராடி நின்ற அனுபவம், குத்துச் சண்டை வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னார்.
ராய்ட்டர்

