




செ.வே.முத்தமிழ்மன்னன்
செமினி, நவ 24-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலுலங்காட் நாடாளுமன்ற தொகுதி மற்றும் வேவ் எனப்படும் சிலாங்கூர் மாநில சமூக நல தொண்டூழிய சங்கம் இணைந்து நடத்திய தீபாவளி சிறந்த இல்ல உச்சரிப்பில் 16 கோவில்கள், 3 தமிழ்ப்பள்ளிகள் மற்றும் 10 அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு 20 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது.
நேற்று செமினி சமூக மண்டபத்தில் தீபாவளி விருந்து பொது உபசரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
உலுலங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து உபசரிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
வேவ் தொண்டூழிய சங்கத்தின் தலைவர் விஷ்ணு , காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் இராமச்சந்திரன் அர்ச்சுனன், சந்திரன் முனுசாமி,செமினி கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரும் இந்த தீபாவளி விழா நடைபெற பெரும் துணையாக இருந்தனர்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி சிறப்பு வருகை தந்து தீபாவளி விருந்து உபசரிப்பை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகன்,
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன், ஐபிஎப் கட்சியின் தேசிய செயலாளர் மோகன், சிலாங்கூர் மந்திரி பெசாரின் (எம்.பி.ஐ. )அறவாரியத்தின் தலைவர் அமாட் அஸ்ரி ஆகியோரும் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
புகழ்பெற்ற லோக்காப் இசை கலைஞர்கள், கொக்கோ நந்தா வின் விறுவிறுப்பான பாடல்கள் மற்றும் மில்லினியம் டான்ஸ் குருப் நடனங்கள் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது.
இந்த தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் செமினி சட்டமன்ற தொகுதியில் உள்ள செமினி தமிழ்ப் பள்ளி, ரிஞ்சிங் தமிழ்ப் பள்ளி மற்றும் டுடனின் தமிழ்ப் பள்ளிக்கு மானியம் வழங்கப்பட்டது.
மேலும் 10 அரசு சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் 16 கோவில்களுக்கும் மானியம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஒட்டுமொத்தமாக 20,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டதாக இராஜன் முனுசாமி தெரிவித்தார்.

