
புதுடில்லி, டிச 1-
‘‘பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும்’’ என பாலஸ்தீனத்துக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு அரசுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாலஸ்தீன மக்களின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவை தெரிவிக்கிறது.
பாலஸ்தீனத்தில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும். பிணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
காசாவில் நடைபெறும் சண்டை, உயிரிழப்பு சோகத்தையும், பாலஸ்தீன மக்களுக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு தற்போது நிலவும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலை குறித்து இந்தியா மிகுந்த கவலை கொள்கிறது.
பாலஸ்தீனத்தில் நீடித்த மற்றும் அமைதியான தீர்வு ஏற்பட தூதரக அளவிலான பேச்சுவார்த்தைதான் தீர்வு என்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது.
பாலஸ்தீனத்தின் வளர்ச்சிக்கு இந்தியா துணை நிற்கும். மக்களின் தேவைகள் அடிப்படையில், மக்கள் மைய திட்டங்களை அமல்படுத்துவதிலும் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா துணை நிற்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த கருத்தை டெல்லியில் உள்ள பாலஸ்தீன தூதரக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

