

அடுத்த ஆண்டு தமிழர் இனத்தின் பெருவிழாவான பொங்கல் திருநாள் எதிர்வரும் 14.01.2025 செவ்வாய்க்கிழமை வர இருப்பதால் நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகள் அனைத்தும் இப்போதே சிறப்பு விடுமுறையை (Cuti Peristiwa) விண்ணப்பிக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் வேண்டுகோள் விடுப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.
இவ்வண்டு பினாங்கு மாநிலத்தில் சுமார் 19 தமிழ்ப்பள்ளிகள் பொங்கல் பெருவிழா விடுமுறையை விண்ணப்பிக்காதது சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் திருநாள் என்பது இயற்கைக்கு நன்றி சொல்லும் ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது திருவள்ளுவர் ஆண்டாகும். மேலும் தமிழர் இனத்தின் புத்தாண்டும் கூட. எனவே அந்த நாளை மிகச் சரியாக அடையாளப்படுத்தி குடும்பத்துடன் கொண்டாடி, மாணவர்களுக்கு அதன் பொருள் விளக்கத்தை உணர செய்து வழி வழியே வரும் மரபை காப்பது நமது வரலாற்றுக் கடமையாகும்.
ஆதலால், மீண்டுமொரு தவறு நிகழாமல் இருக்க, இப்போதே நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளி நிர்வாகம் குறிப்பாக, தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரிய குழு, மாநில தலைமையாசிரியர்கள் சங்கம், தேசிய தலைமையாசிரியர் சங்கம், முன்னாள் மாணவர் சங்கம் ஆகியோர் இச்சிறப்பு விடுமுறையை உறுதி செய்ய வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் சார்பில் பாலமுருகன் வீராசாமி கேட்டுக்கொண்டார்.

