
சென்னை: டிச 20-.
அம்பேத்கர் குறித்து சர்ச்சையான வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி சென்னையில் 75 இடங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமித்ஷாவின் உருவப்படத்தை கொளுத்தியும், கிழித்தெறிந்தும் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலங்களவையில் அரசியல் சாசனம் மீது நடைபெற்ற சிறப்பு விவாதத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, ‘ அம்பேத்கர் பெயரை பயன்படுத்துவது தற்போது பேஷனாகி விட்டது.
இந்த அளவுக்கு கடவுளின் பெயரை கூறி இருந்தால் 7 பிறவிகளிலும் சொர்க்கத்தை அடையலாம்’ என்று தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், நேற்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னையிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார்.

