
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டினார். அருள்மிகு கபாலீசுவரர் கல்லூரிக்கு ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு கொளத்தூரில் மொத்தம் 5.96 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தரை மற்றும் நான்கு தளங்களுடன் 20 வகுப்பறைகள், முதல்வர் அறை, ஆசிரியர்கள் அறை, அலுவலகம், ஆய்வகங்கள் கட்டப்பட உள்ளது. கணினி அறை, கருத்தரங்கு கூடங்கள், நூலகம், உணவகம், கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகளுடனுடன் கட்டப்பட உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 24 வகுப்பறைகள், ஆசிரியர்கள் அறை, கருத்தரங்கு கூடம், ஆய்வகங்கள் மற்றும் கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளன.

