
ஈப்போ, டிச.30: ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் 83 வது பொதுக்கூட்டத்தில், குறிப்பாக பழைய நிர்வாகத்தின் நிதிமுறைகேடு குறித்து விவாதிக்க முன்னுரிமை வழங்கப்பட்டது.
இவ்விவகாரத்தில் பழைய நிர்வாகத்தினர் 30 நாட்களுக்குள் நிதியை திரும்ப செலுத்த தவறினால், அடுத்தகட்ட நடவடிக்கையாக போலீஸ் புகார் மற்றும் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ள பொதுக்கூட்டத்தில் ஏகமானதாக முடிவு எடுக்கப்பட்டதாக ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் இரா.சீத்தாராமன் கூறினார்.
அதுமட்டுமின்றி, புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக திருப்பணி செய்வதற்கும், புந்தோங் இடுகாட்டில் மேலும் ஒரு மின்சுடலையை பொருத்துவதற்கு அனுமதியும், நிதி தொகையும் கிடைக்கபெற தீர்மானங்கள் இப்பொதுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பிப்ரவரி 11 ல் தைப்பூசம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு முதல் கட்டமாக ஜனவரி 5 ல் சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு, ஈப்போ கல்லுமலை ஆலய வளாகத்தில் சிறுதொழில் வியாபாரிகளுக்கு கடைகள் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் பொதுமக்கள் நேரடியாக வந்து கலந்துக்கொண்டு கடைகளை ஏலம் எடுக்க அழைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் இவ்வாண்டு தைப்பூசம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் தொடங்கி விட்டன என்று அவர் கூறினார்.

