


சுங்கை,ஜன01: கடைநிலை மாணவர்கள் தங்களின் நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்ய தொழிற்திறன் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
அவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு தொழிற்திறன் கல்வி பெரும் நம்பிக்கையை அளிக்கும்.இன்றைய நவீன உலகம் தொழில் புரட்சி 4.0வை நோக்கி வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில் நாளைய உலகின் ஆளுமையாக உருமாறி வரும் தொழில்திறன் கல்வியில் தனித்துவ கவனம் செலுத்த வேண்டும்.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு அ.சிவநேசன் இடைநிலைப்பள்ளியை நோக்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்னும் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைக்கையில் இந்திர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் நினைவுறுத்தினார்.
இந்திய மாணவர்களும் இளைஞர்களும் தொழிற்திறன் கல்வியில் ஆளுமை செலுத்தவும் அவர்கள் அதனை நோக்கி பயணிக்கவும் அவர்கள் மத்தியில் தொழில்திறன் கல்வி சார்ந்த ஆர்வத்தையும் அதனால் விளையப்போகும் நன்மைகளையும் ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளையில்,கடைநிலை மாணவர்களோடு கல்வியில் ஆர்வமின்றி தொழில்கல்வியில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களையும் அடையாளம் கண்டு அத்துறை சார்ந்து மிளிர ஆக்கப்பூர்வமான பங்களிப்பை செய்திடல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும்,தொழில்திறன் கல்வி சார்ந்த விளக்கம்,தெளிவுரைகளை வழங்குவதோடு அதுசார்ந்த அனைத்து முன்னெடுப்புகளுக்கும் தனது சேவை மையம் தயாராக இருப்பதாக கூறிய அவர் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்க தொழில்திறன் கல்வியில் தன் வீட்டுப்பிள்ளைகள் முனைப்பு காட்ட முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பத்தாங் பாடாங் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் சுங்கை சட்டமன்ற சேவை மையத்தின் ஆதரவோடு சுமார் 12 தமிழ்ப்பள்ளிகளை சார்ந்த 100க்கும் மேற்பட்ட ஆறாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பத்தாங் பாடாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் திரு.தியாரன் பேசுகையில் மாண்புமிகு சிவநேசனின் சேவையை வெகுவாக பாராட்டினார்.மேலும்,மாண்புமிகு சிவநேசன் தமிழ்ப்பள்ளி,மாணவர்கள்,இந்தியச் சமுதாயம் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் கொண்டிருக்கும் அக்கறையும் தனித்துவமும் நனிச் சிறந்தது எனவும் புகழாரம் சூட்டினார்.
சுங்கை சட்டமன்றத்தின் தொழில்திறன் பயிற்சி மையத்தின் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்,சவால்கள்,வாய்ப்புகளை பயன்படுத்தும் யுக்திகள்,மொழி புலமை,சீர்கேடு சிக்கல் என பல்வேறு தலைமைப்புகளில் பீடோர் ஷேக் அப்துல்கனி இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான அஞ்சலிசிவா மற்றும் ஜெயசுதா ஆகியோர் மாணவர்களோடு கலந்துரையாடினார்கள்.
இனி ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சியை தலைமையாசிரியர் மன்றம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய இருந்த சிவநேசன் பத்தாங் பாடாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்திற்கு வெ.15 ஆயிரமும் பயிலரங்கை சிறப்பாக வழிநடத்திய ஆசியர்களுக்காக ஷேக் அப்துல்கனி இடைநிலைப்பள்ளியின் இந்திய மாணவர்களின் செயல்பாடுகளுக்காக வெ.10 ஆயிரத்தை தமிழ்மொழி கழகத்திற்காகவும் வழங்குவதாக உறுதி அளித்தார்.

