மக்களின் கைப்பேசிகள் இஷ்டம் போல் பரிசோதிக்கப்படாது

கோலாலம்பூர், ஜன 22: பொது இடங்களில் மக்களின் கைப்பேசிகளை காவல்துறை அதிகாரிகள் இஷ்டம் போல் பரிசோதனை செய்யமாட்டார்கள் என தேசியப் காவல்துறை படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் தெரிவித்தார்.

கைப்பேசிகளைப் பரிசோதிக்கும் காவல்துறை அதிகாரிகளின் அதிகாரம் குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், நியாயமான சந்தேகம் ஏற்படும் போது மட்டுமே அச்சோதனைகள் நிகழும் என்றார் அவர்.

அதாவது, நபர் ஒருவர் குற்றம் செய்திருப்பதாக நம்பத்தகுந்த தகவல், உளவுத்துறை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான சந்தேகம் எழும் போதே பரிசோதனை நடக்கும்.

வெறுமனே சாலையில் வருவோர் போவோரை நிறுத்தி கைப்பேசிகளை வாங்கி பரிசோதிக்க மாட்டோம் என அவர் சொன்னார்.

அரசியலமைப்புச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே காவல்துறை அதிகாரிகள் நடந்துகொள்வர் என பொது மக்களுக்கு அவர் உத்தரவாதம் அளித்தார்.

சட்ட அமுலாக்கமும் தனிமனித உரிமைக் காப்பும் சமச்சீராக இருந்தால் தான், காவல்துறை அதிகாரிகள் மீதான நம்பகத்தன்மையும் வலுப்பெறும் என அவர் கூறினார்.

இன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேலான பொறுப்புகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மட்டுமே கைப்பேசிகளை பரிசோதிக்க முடியும் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles