2029ஆம் ஆண்டில் வெ.500 கோடி வருமானத்தை ஈட்ட சிலாங்கூர் இலக்கு

வரும் 2029ஆம் ஆண்டுவாக்கில் 500 கோடி வெள்ளி
வருமானத்தை ஈட்ட சிலாங்கூர் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களின் கூட்டு முயற்சி மற்றும் மனவுறுதியின் மூலம்
சிலாங்கூர் பொருளாதார ரீதியாக சிறப்பாகச் செயல்பட முடியும் எனத்
தாம் நம்புவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இறைவன் அருளால் கடந்த 2024ஆம் ஆண்டு சிலாங்கூர் 286.7 கோடி
வருமானத்துடன் மாநில வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையைப்
புரிந்துள்ளது. மக்களின் நலனுக்காக வளங்களை நிர்வகிப்பதில் அரசு
நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு இது ஒரு சான்றாகும் என
அவர் சொன்னார்.

இருப்பினும், இந்த அடைவுநிலையில் நாம் மனநிறைவு கொண்டு
விடக்கூடாது என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்.
மாநிலத்தின் வருமானத்தை எதிர்காலத்தில் 300 கோடி வெள்ளியாகவும்
வரும் 2029ஆம் ஆண்டுவாக்கில் 500 கோடி வெள்ளியாகவும் உயர்த்த
இலக்கு நிர்ணயித்துள்ளேன்.

அனைத்துத் தரப்பினரின் மனவுறுதி மற்றும் கடும் உழைப்பின் மூலம்
சிலாங்கூர்  மலேசியாவில் அதிக மேம்பாடடைந்த மாநிலமாக
தொடர்ந்து விளங்கும் என அவர் சமூக ஊடஙகள் வாயிலாக வெளியிட்ட
பதிவொன்றில் குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டு இறுதியில் மாநில அரசு 285.8 கோடி வெள்ளியை
வருமானமாக ஈட்டியுள்ளது என்று அமிருடின் கடந்த ஜனவரி
1ஆம்   தேதி கூறியிருந்தார்.

சிலாங்கூர் மாநில வரலாற்றில் இதுவே மிக உயர்ந்த  வருமானம் எனக்
கூறிய அவர், கடந்த 2017ஆம் ஆண்டில் 281.1 கோடி வெள்ளியாக இருந்த
அதிகப்பட்ச வருமானத்தை இது மிஞ்சி விட்டது என்றார்.

மாநில அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு 270 கோடி வெள்ளியையும் 2022ஆம்
ஆண்டு 250 கோடி வெள்ளியையும் 2021 ஆம் ஆண்டு 230 கோடி
வெள்ளியையும் வருமானமாக ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles