
கோலாலம்பூர், பிப் 14: கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிவரை நடைபெற்ற 2024-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதுவதற்கு மொத்தம் 8,076 பேர் வருகை புரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 6,231 பேர், கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளி மாணவர்கள் என்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை, குடும்ப பிரச்சனைகள், சுகாதார சிக்கல்கள், இறப்பு மற்றும் வெளிநாட்டிற்கு மாற்றலாகி செல்வது போன்றவை 2024 எஸ்பிஎம் தேர்வு எழுதாதவர்களின் முக்கிய காரணங்களாக இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எஸ்பிஎம் தேர்வு எழுத வராதவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக மாணவர் தரவுத்தள விண்ணப்பம் APDM செயலியின் வழி, தினசரி அடிப்படையில் பள்ளியில் மாணவர் வருகையைக் கண்காணிப்பது உட்பட பல நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
மேலும், எஸ்பிஎம்தேர்வு எழுதுவதில் இருந்து விடுபடும் மாணவர்களைக் கண்காணிக்க அனைத்து நிலைகளிலும் சிறப்பு பணிக்குழுவை உருவாக்குவது மற்றும் தேர்வுக்கு அவர்களின் வருகையை உறுதிசெய்து போன்றவையும் அதில் அடங்கும்.
அதேவேளையில், பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், சமூகம் மற்றும் தனியார் ஆகிய தரப்புகளை உட்படுத்திய திட்டங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது.