
திருவெறும்பூர்: திருச்சி சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியும் ஒன்றாகும்.
தமிழகத்தில் மதுரை, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றதாகும். அது போல் திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூர் ஜல்லிக்கட்டும் புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் 2ம் நாளான மாட்டு பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்நிலையில் இப்பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்து தர வேண்டுமென திருவெறும்பூர் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் சூரியூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் புதிய ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவில் உதயநிதி பங்கேற்றார். வாடிவாசல் போல் விழா மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. இருபுறமும் 150 ஜல்லிக்கட்டு காளைகளை நிறுத்தி உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், கலெக்டர் பிரதீப்குமார், திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

