
ஜொகூர் பாரு, பிப் 21-
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பத்லி ஷாரி (PAS) அவர்கள் மலேசிய சந்தையின் பலகையில் மலாய் (BM), சீனம், மற்றும் தமிழ் – ஆகிய மூன்று மொழிகள் பயன்படுத்தப்பட்டதை கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் பெர்சாத்து ஜொகூர் மாநில துணைத் தலைவர் என்ற முறையில், மலேசியாவின் வீடமைப்பு அமைச்சகம் மேற்கொண்ட இந்த முயற்சியை முழுமையாக ஆதரிக்கின்றேன்.
மலாய் மொழியுடன் சீனம் மற்றும் தமிழ் மொழிகள் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம், இது மலேசியாவின் பன்முகத்துவத்தையும், இங்கு வாழும் மக்களின் ஒற்றுமையையும் மிகச் சிறப்பாக பிரதிபலிக்கிறது.
மலேசியா ஒரு பல்லின மக்கள் வாழும் நாடாக விளங்குகின்றது.இங்கு ஒற்றுமையின்
அடையாளமாக சீனம் மற்றும் தமிழ் மொழிகளும் மலாய் மொழியுடன் இணைந்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
மலேசியாவின் கூட்டாட்சி அடிப்படையையும், ஒருமைப்பாட்டையும் இது வலுப்படுத்தும். மேலும், தமிழ் மற்றும் சீனம் எந்த ஒரு புதிய மொழிகளும் அல்ல. இந்த இரு மொழிகளும் மலேசியாவின் தனித்துவமான வரலாற்றின் ஒரு அங்கமாக, இங்கு வாழும் சமூகங்களின் அடையாளமாக பல நூற்றாண்டுகளாக நிலவிவருகின்றன.
எனவே, சந்தை பலகைகளில் இந்த மூன்று மொழிகளும் இடம்பெறுவது சமத்துவத்தையும், இனத்துவத்தையும், மக்கள் ஒற்றுமையையும் பேணுவதற்கான ஒரு முக்கிய அடையாளமாகும்.
அதனால், மலேசியாவின் ஒற்றுமை, மக்கள் நலன் மற்றும் தேசிய ஐக்கியத்திற்காக, இந்த மொழி அடையாளங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது மலேசிய ஒருமைப்பாட்டிற்கு புறம்பானது என்று நான் நம்புகிறேன்.
பூபாலன் பொன்னுசாமி
ஜொகூர் மாநில பெர்சத்து துணை தலைவர்.

