

ஷா ஆலம், பிப். 24- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள டேவான் அஸாலியாவில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாமான் ஸ்ரீ மூடா மற்றும் புக்கிட் கெமுனிங் வட்டார மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டறிந்து உரிய தீர்வினைக் காணும் நோக்கில் கோத்தா கெமுனிங் தொகுதி சேவை மையம் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் ஷா ஆலம் மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஏ.), காவல் துறை, வடிகால் மற்றும் நீர்ர்பாசனத் துறை ஜே.பி.எஸ்.), தெனாகா நேஷனல் (டி.என்.பி.) உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
தாமான் ஸ்ரீ மூடா மற்றும் புக்கிட் கெமுனிங் வட்டார மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக பிரகாஷ் கூறினார்.
இந்த நிகழ்வுக்கு மக்கள் வழங்கிய ஆதரவு ஊக்கமூட்டும் வகையில் இருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மக்கள் அவசரத் தீர்வுக்கான அவசியம் உள்ள பிரச்சினைகள் உள்பட பல்வேறு விவகாரங்களை எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்று அவர் சொன்னார்.
பொது மக்கள் முன்வைத்த பிரச்சினைகளில் வெள்ளத் தடுப்பு திட்டங்கள், சாலை சீரமைப்பு, சட்டவிரோதக் குடியேறிகள், அனுமதியின்றி தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் அடங்கும்.
பொது மக்கள் முன்வைத்த இப்பிரச்சினைகளை இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசு நிறுவனப் பிரதிநிதிகள் கவனத்தில் கொண்டதேடு உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர் என்றார் அவர்.
இந்த மக்கள் சந்திப்பின் அடுத்தக் கட்ட நிகழ்வு கோத்தா கெமுனிங் மற்றும் செக்சன் 28 ஆலம் மேகா ஆகிய இடங்களில் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு கொண்ட அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வட்டார மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் இத்தகைய மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை அடிக்கடி நடத்துவதன் மூலம் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டத் தரப்பினரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு வருவதற்கான வாய்ப்பு கிட்டும் என்றார் அவர்.

