
கோலாலம்பூர் மார்ச் 6-
தைப்பூசத்தின் போது இந்துக்கள் வேல் வேல் என்று கூறுவதை பேய் பிடித்தவர்கள் அல்லது போதையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்டு பேசிய சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத்தை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் பொறுப்பற்றதாகவும் மிகவும் அவமரியாதைக்குரியதாகவும் உள்ளது.
இந்து உணர்வுகளை வெளிப்படையாக புறக்கணிப்பதாக அவர் கூறினார்.
இது மடானி அரசாங்கத்தால் கடைப்பிடிக்கப்படும் 3ஆர் எனப்படும் இனம், மதம், அரச ஆட்சியாளர்கள் கொள்கைகளின் தெளிவான மீறலாகும்.
இதுபோன்ற எரிச்சலூட்டும் அறிக்கைகள் நமது நாட்டின் நல்லிணக்கத்தை அச்சுறுத்துகின்றன.
ஆகையால் இந்த விவகாரத்தில் யாரும் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என்று அவர் சொன்னார்.
அவருக்கு எதிராக பல போலிஸ் புகார்கள் ஏற்கெனவே செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆத்திரமூட்டலைத் தடுக்க போலிஸ், அரசாங்கம் விரைவான தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜம்ரியின் தொடர்ச்சியான குற்றங்கள் மலேசியாவின் பல மத சமூகத்தின் மீது முழுமையான உணர்திறன், மரியாதை இல்லாததைக் காட்டுகின்றன.
அவரது வார்த்தைகள் இந்து நம்பிக்கை, அதன் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு நேரடி அவமானமாகும்.
ஜம்ரி இந்து மதத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல.
ஆகையால் அவர் மீது விரைவாக வழக்குத் தொடரப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோனை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

