
கோலாலம்பூர், ஏப் 2-
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் செயலாளர் கே.சந்தனராஜூவின் மறைவுக்கு மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டுள்ளது.
மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இவரின் திடீர் மரண செய்தியை கேட்டு பெரும் வேதனையை அடைந்தேன் என்று மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர் டத்தோ சுப்ரா ரத்னவேலு தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவை பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு இவர் பங்கு அளப்பரியது.
எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் சந்தனராஜூவின் மறைவு மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவைக்கு பேரிழப்பாகும் என்று அவர் சொன்னார்.
பரதன் கிண்ணக் கால்பந்து போட்டியின் வழி நாட்டில் தலைசிறந்த இளம் கால்பந்து வீரர்களை உருவாக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது.
நாட்டின் விளையாட்டு துறை மேம்பாட்டிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு தேசத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் சொன்னார்.
இதனிடையே Sentul Hindu Crematorium Parlour இல் வைக்கப்பட்டிருக்கும் இவரது நல்லுடலுக்கு மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர்கள், மலேசிய இந்தியர் விளையாட்டு பேரவையின் தலைவர்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆசியா கால்பந்து சம்மேளனத்தின் செயலாளர் டத்தோஸ்ரீ வின்செர், மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மலேசிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம், மலேசிய கால்பந்து சங்கத்தின் உதவி தலைவர் வழக்கறிஞர் சேரன் நடராஜா, மலேசிய கால்பந்து சங்கத்தின் முன்னாள் செயலாளர் டத்தோஸ்ரீ அசூடின், மலேசிய கால்பந்து சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் தான் சி ஹோங், மலேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்றுநர் டத்தோ ராஜகோபால், டத்தோஸ்ரீ சுபாஹான் கமால் ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
நாளை பிற்பகல் 12.00 மணிக்கு மேல் இறுதி சடங்கிற்கு பின்னர் அன்னாரது நல்லுடல் செராஸ் மின்சடலையில் தகனம் செய்யப்படுகிறது.

