
கோலாலம்பூர், ஏப். 5 – சிலாங்கூர் மாநிலத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 1 கோடியே 60 லட்சம் வெள்ளி மதிப்புள்ள மெத்தம்பெத்தமின் வகை போதைப் பொருளை கைப்பற்றியதன் மூலம் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த மாதம் 27ஆம் தேதி காலை 7.20 மணியளவில் சுபாங் ஜெயாவில் கார் ஒன்றை தடுத்து நிறுத்தி இரண்டு உள்ளூர் ஆடவர்களை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டி.சி.பி மாட் ஜானி @ முகமது சலாவுடின் சே அலி தெரிவித்தார்.
அந்த காரை சோதனை செய்த போலீசார் காரின் பின்புற பயணிகள் இருக்கை மற்றும் பொருள் வைக்குமிடத்தில் 156 கிலோ எடையுள்ள 150 மெத்தம்பெத்தமின் பொட்டலங்கள் அடங்கிய ஆறு சாக்குப்பைகளைக் கண்டுபிடித்தனர் என அவர் சொன்னார்.
இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதே பகுதியில் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஹோம்ஸ்தேய் தங்குமிடத்தை சோதனை செய்து 312 கிலோ எடையுள்ள 300 போதைப்பொருள் பொட்டலங்கள் கொண்ட 12 சாக்குப் பைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் என்று அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

