
சிரம்பான், மே 1-
மலேசியத் தமிழ்ப் பத்திரிகை உலகில் இளைய தமிழவேள் ஆதி குமணன் ஒரு போராளி என்று போற்றப்படுபவர். இவர் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலராகவும் திகழ்ந்தார்.
இவர் மறைந்து 21 ஆண்டுகள் கடந்தாலும் இன்னமும் பேசப்படும் ஒரு மனிதராகவே வலம் வருகிறார் என்று லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ ரெனா. இராமலிங்கம் பிள்ளை தெரிவித்தார்.

அமரர் ஆதி குமணன் ஆற்றிய பணிகளை அவர் வெகுவாக பாராட்டினார்.
மலேசிய தமிழ் பத்திரிகை உலகில் தனக்கு ஒரு இடம் பிடித்த ஆதி குமணன் அவர்கள் மறைந்து 21 ஆண்டுகள் கடந்தும் அவரை நினைவு கூர்ந்து விழா நடத்துவது பெருமையளிக்கிறது என்றார்.
அவர் மறைந்தாலும் இன்னமும் நினைவு கூறப்படும் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில்
அமரர் ஆதி குமணனின் 25 ஆம் ஆண்டு நினைவு விழா மிகப்பெரிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கவிஞர் அமுத இளம்பரிதி தலைமையில் இன்று அமரர் இளைய தமிழவேள் ஆதி குமணன் நினைவு நாள் விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
நாடாறிந்த அறிவிப்பாளர் பொன்.கோகிலம் அறிவிப்போடு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.
நெகிரி செம்பிலான் மாநில இந்தியர் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டத்தோ சேரன் நடராஜா, டத்தோ ஜே.பி.கணேசன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் உட்பட பலரும் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் மு.திருநாவுக்கரசு தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் இளையத் தமிழ்வேள் ஆதி குமணன் நினைவு நாள் விழாவை சிறப்பாக நடத்தினர்.

