
பெருவாஸ், ஏப். 24-
மஞ்சோங்கில் நடந்து முடிந்த மஞ்சோங் மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான 12 வயதுக்குட்பட்ட வீசுப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளி வாகை சூடி சாதனையை ஏற்படுத்தியது.
மஞ்சோங் வட்டாரத்தில் உள்ள் 32 தொடக்கப் பள்ளிகள் இப்போட்டியில் பங்கெடுத்தன.
ஜி குழுவில் இடம்பெற்றிருந்த பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, குழுமுறையில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிப்பெற்று அடுத்தக்கட்ட சுற்றுக்கு முன்னேறியது.

அச்சுற்றில் எங் லிங் சீனப்பள்ளியை 13-2 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
கால் இறுதி சுற்றிலும் மெத்தடிஸ் தேசியப் பள்ளியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். அரையிறுதி சுற்றில் பலத்த போட்டிக்கிடையில் அண்ட்லி தேசியப் பள்ளியை வீழ்த்தி இறுதி போட்டியில் கால் பதித்த பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பலம்பொருந்திய குழுக்களில் ஒன்றான பெருவாஸ் தேசியப் பள்ளியை பினால்டி வழி தோற்கடித்தனர்.
இவ்வெற்றியானது பெருவாஸ் தமிழ்ப்பள்ளியின் பெயரை மஞ்சோங் வட்டாரத்தில் வலுவடையச் செய்துள்ளதாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் குணசீலன் மனோகரன் தெரிவித்தார்.
மேலும், நேரம் காலம் பாராது அயராது பாடுபட்ட பயிற்றுநர் ஆசிரியர் நாகராஜனுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டார்.
அவருக்கு உறுதுணையாக இருந்த பள்ளிப் புறப்பாட ஆசிரியர் பௌத்ரன் மற்றும் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியினையைத் தெரிவித்துக்கொண்டார்.
மாணவி தபாஸ்வினி சிறந்த விளையாட்டளர் விருது மற்றும் மாணவி தனுஷா சிறந்த கோல் காவலர் விருது வழங்கி சிறப்பித்தது வெற்றியின் மணிமகுடமாக அமைந்தது.

