
ஈப்போ, மே.20: இவ்வாண்டில் பேராக் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக பேராக் மாநிலத் தமிழர் திருநாள் இயக்கம் முத்தமிழ் விழாவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு வரும் 24.5.2025( சனிக்கிழமை), காலை மணி 8.00 க்கு புந்தோங் அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இங்கு மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏழு வகையான தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவர் வழக்கறிஞர் எம்.மதியழகன் கூறினார்.
அதே வேளையில் இங்கு ஆசிரியர்கள் பங்குகொள்ள சிறுகதை எழுதும் போட்டியும், பேச்சுப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெற்றோர்கள் விளையாட பல்லாங்குழி விளையாட்டும், மாணவர்களுக்கு பேச்சு போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து வருகையாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். அதன் பின், மதியம் 1.30 மணிக்கு புந்தோங் ஜாலான் சுங்கை பாரியில் அமைந்துள்ள எங்கலிக்கன் தேவலாய மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று அவர் சொன்னார்.
இந்த எங்கலிக்கன் தேவாலய மண்டபத்தில், பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் இந்நிகழ்வினை முன்னிலை வகிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், தமிழ் சான்றோர்கள் போல் வேடம்அணிதல், வேட்டி அழகர், சேலை அழகு ராணி, பாடல் போட்டி( மாணவர்களுக்கு), பரத நடனப்போட்டி ஆகியவை நடைபெறும் என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு சேவையாற்றிய மூவர் சிறப்பிக்கப்படவுள்ளனர். அவர்களில் துன் வீ தி சம்பந்தன் விருது க.அருள் ஆறுமுகத்திற்கு வழங்கப்படுகிறது. இரண்டாவதாக மொழி, இலக்கியத்திற்காக இளங்கலை, முதுகலையை 45 மாணவர்களுக்கு போதித்த சு.உத்திராபதிக்கு குறிஞ்சி குமரனார் விருதும், இளைய வேள் ஆதி.குமணன் விருது சிவா லெனினுக்கு வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் பரிசுகளை எடுத்து வழங்குவார். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்போடு அழைக்கப்படுவதாக பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்க தலைவர் கு. மாயமுத்து கேட்டுக்கொண்டார்.

