
புத்ரா ஜெயா, ஜூன் 9-
உப்சி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துள்ளான சம்பவத்தில் 15 பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தம்மையும் தமது துணையியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிசாவையும் வெகுவாக பாதித்ததாக குறிப்பிட்ட பிரதமர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க வேண்டுமென்றும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்.
வாழ்க்கை விலைமதிப்பற்றது. அவசரப்படமால் கவனமாக இருக்க வேண்டுமென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஹஜ் பெருநாள் முடிந்து, கிளந்தான் திரங்கானுவிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது பேரா தாசேக் பந்திங் அருகே உள்ள ஜாலான் ஜெலி – கிரிக் பகுதியில்நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கினர்.
இதில் 15 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். அதே வேளையில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த துயர சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

