
கோலாலம்பூர், ஜூன் 10 – சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையாக கனரக வாகனங்கள் மீது வேகக் கட்டுப்பாட்டை கட்டாயமாக அமல்படுத்துவது உள்ளிட்ட புதிய கொள்கைகளை அரசாங்கம் தற்போது உருவாக்கி வருகிறது.
இந்தக் கொள்கை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில் அமலாக்கத்தின் போது எந்த விதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்காதவாறு அந்த வழிமுறைகள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சாலைப் பாதுகாப்புக் கொள்கைகளை வலுப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது.
சாலையைப் பயன்படுத்துவோரைப் பாதுகாக்க, குறிப்பாகப் பொறுப்பற்ற ஓட்டுநர்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யாத கனரக வாகனங்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று அவர் முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்தார்.
கிரீக், கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் பானுன் அருகே, உப்ஸி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று விடியற்காலை பெரேடுவா அல்ஸா வாகனத்துடன் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் 15 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
bernama

