
பத்துகாஜா, ஜூன்11: மாற்றுத்திறனாளிகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.அவர்கள் மீது பரிவு காட்டுவதை காட்டிலும் அன்பும் அறவணைப்பும் காட்டப்பட வேண்டும்.
அவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட வேண்டியவர்கள்.அவர்களை அன்பால் பேணி,அக்கறையோடு பார்த்து கொள்ளுதல் என்பது மனித மாண்புகளின் உச்சம் எனவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் மனம் நெகிழ குறிப்பிட்டார்.
பத்துகாஜாவில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகள் சமூகநல மையத்திற்கு வருகை புரிந்த பின்னர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.
திரு.சிவா அவர்களின் பராமரிப்பில் சுமார் 45 மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கொண்ட இந்தப் பராமரிப்பு இல்லத்தில் அக்குழந்தைகளைக் கண்காணிக்கவும் அன்போடு பராமரிக்கவுக் 10 தொண்டூழியச் சேவையாளர்களும் இருந்து வருகிறார்கள்.
முன்னதாக பலமுறை இம்மையத்திற்கு தாம் தொடர்ந்து பங்களிப்பு செய்து வந்திருப்பதையும் நினைவுக்கூர்ந்த சிவகுமார் தொடர்ந்து இம்மையம் தனித்துவமாய் செயல்படவும் அக்குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவு செய்யவும் வெ.10 ஆயிரத்தை மானியமாக வழங்கினார்.
இன்றைய சூழலில் அம்மையம் எதிர்நோக்கும் சிக்கல்,சவால்களை அதன் பராமரிப்பாளர் சிவாவிடம் கேட்டறிந்த பின்னர் மானியத்தையும் வழங்கிய சிவகுமார் இம்மையத்தின் தேவைகளும் அவசியங்களும் எல்லா காலக்கட்டத்திலும் கவனத்தில் கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யபடும் என்றார்.
அதேவேளையில்,அக்குழந்தைகளை அன்பாகவும் நேசமிகுந்தும் கண்காணித்து வரும் சிவா மற்றும் அம்மையத்தின் தொண்டு பணியாளர்களையும் வெகுவாக பாராட்டிய சிவகுமார் இச்சேவையை கடமையாக மேற்கொள்ளும் இவர்கள் அனைவரும் கடவுளின் அன்பை பெற்றவர்கள் என்றும் புகழுரைத்தார்.

