
வாஷிங்டன் : உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “அகமதாபாத் விமான விபத்து மிகவும் பயங்கரமானது.இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. பலம் வாய்ந்த நாடான இந்தியா, இதை நன்றாக கையாளும் என நம்புகிறேன்.
வரலாற்றிலேயே இது ஒரு மோசமான விமான விபத்தாகும். எந்த உதவியையும் செய்ய அமெரிக்க தயாராக இருப்பதாக இந்தியாவிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்,”இவ்வாறு தெரிவித்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , விபத்து தொடர்பான விசாரணை நடந்து கொண்டு இருப்பதாகவும் விபத்திற்கான காரணத்தை கண்டறிய இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான விசாரணைக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களில் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் 52 பேர் என்று குறிப்பிட்ட அவர், விமான விபத்து மனதை நொறுக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

