ஆண்டவன் அருளால் நான் உயிர் தப்பினேன் – விமானத்தை தவற விட்ட பூமி சவுகான் பேட்டி

அகமதாபாத்: ஆண்டவன் அருளால் தான் உயிர் தப்பியதாக விபத்துக்குள்ளான விமானத்தை தவற விட்ட பூமி சவுகான் பேட்டி அளித்துள்ளார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில், விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய வாய்ப்பை தவறவிட்டதால் பூமி சவுகான் என்பவர் உயிர் பிழைத்திருக்கிறார்.

விபத்துக்குள்ளான விமானத்தை தவற விட்ட பூமி சவுகான் அளித்த பேட்டியில், “அகமதாபாத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் விமானத்தை தவறவிட்டேன். விமான நிலையத்தின் செக்-இன் வாயிலுக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தேன். தாமதமாக வந்ததாகக் கூறி காவலர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

விமானத்தை தவறவிட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினேன்; விமானம் விபத்துக்குள்ளான செய்தி கேட்டதும் உறைந்து போனேன். ஆண்டவன் அருளால் நான் உயிர் தப்பினேன்.” என்று தெரிவித்தார். குஜராத்தின் பரூச் நகரைச் சேர்ந்த பூமி சவுகான், லண்டனில் கணவர் மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெற்றோரைப் பார்ப்பதற்காக இந்தியா வந்த பூமி சவுகான், நேற்று ஏர் இந்தியா விமானத்தில் லண்டனுக்குப் பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles