


ஈப்போ, ஜுன் 19- பேராக் மாநில சொக்சோ வாரியத்தின் ஏற்பாட்டில் வேலை வாய்ப்பும் மற்றும் தொழிற்கல்வி கண்காட்சியும் பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதியான இயோன் பாலிமில் சிறப்பாக நடந்தேறியது என்று இந்நிகழ்வை தொடக்கி வைத்தபோது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
இம்முறை சுமார் 15 நிறுவனங்கள் 950 வேலை வாய்ப்புகளுடன் இக்கண்காட்சியில் கலந்துக்கொண்டனர். இதுவரை காலை நேர அடிப்படையில் 55 இளைஞர்கள் நேர்முகப் பேட்டியின் வாயிலாக வேலைகள் கிடைக்கப் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, மேலும் அதிகமான இளைஞர்கள் நேர்முகப் பேட்டிகளில் கலந்துக்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை இங்கு எஸ்.பி.எம் மற்றும் எஸ்தி.பி.எம். தேர்வு முடிவு கிடைத்த மாணவர்கள் அதிகமானோர் கலந்துக்கொண்டுள்ளனர். அதே வேளையில் குறிப்பிட்ட மாணவர்கள் தங்கள் கல்வியை உயர்த்தும் பொருட்டு் தொழிற்கல்வி கூடங்களில் படிக்கவும் வாய்ப்பினை கேட்டறிந்தனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, இளைஞர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர 14 கல்லூரிகள் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்து வந்தனர். குறிப்பாக, பலர் தங்களுக்கு வேலை இல்லை என்று புகார் செய்து வருகின்றனர். ஆனால், இங்கு 950 வேலை வாய்ப்புகள் உள்ளதாக பல நிறுவனங்கள் முகப்பிடம் திறந்து வைத்துக்கொண்டு நேர்முகப் பேட்டியை வழிநடத்தி வருவதை அவர் கோடிக்காட்டினார்.
இம்முறை பத்துகாஜா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு 50 மகளிர்களுக்கு சொக்சோ திட்டத்திற்கு உதவும் பொருட்டு 6 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடும்; ஆண்களுக்கு சொக்சோ உதவித்திட்டத்திற்கு 50 பேருக்கு 3500 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில், பேராக் சொக்சோ வாரிய இயக்குநர் மோமனதாஸ கலந்துக்கொண்டு சொக்சோ தரப்பில் காசோலையை பெற்றுக்கொண்டார்.

