


மா.பவளச் செல்வன்
கோலகுபு பாரு, ஜூலை 5-
சொக்சோ எனப்படும் சமூக நல பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில்
இன்று மெர்டேகா கோலகுபு பாரு மண்டபத்தில் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் சந்தை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு நடைபெற்றது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த வேலை வாய்ப்பு சந்தையில் மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது.
கடந்த ஆண்டு ஒன்பது மாவட்டங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்தது.
இந்த ஆண்டு இதுவரை மூன்று இடங்களில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு சந்தையில் 400 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இன்று கோலகுபு பாருவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மொத்தம் 23 நிறுவனங்கள் இன்று வேலை வாய்ப்பு சந்தையில் பங்கேற்று வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் வழங்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்றார் அவர்.
இதற்குப் பிறகு, ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் உலு லங்காட் (ஜூலை 19 – பெர்பண்டாரான் எம்பிஏஜே மண்டபம்) மற்றும் கிள்ளான் (செப்டம்பர் 27 – ஹம்சா மண்டபம்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து, இத்திட்டம் கோலா சிலாங்கூர் (ஆகஸ்ட் 9 – எம்.பி.கே.எஸ். புஞ்சாக் ஆலம் மண்டபம்), சபாக் பெர்ணம் (அக்டோபர் 11 – துன் ரசாக் மண்டபம்), மற்றும் சிப்பாங் (நவம்பர் 15 – கோமுனிட்டி பிபிஎஸ்டி மண்டபம்) ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த இடங்களில் நடைபெறும் வேலை வாய்ப்பு சந்தையில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான வேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே இன்று கோலகுபு பாருவில் நடைபெற்ற வேலை வாய்ப்பு சந்தையில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன், கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

