
பெட்டாலிங் ஜெயா ஜூலை 4 ; மலேசியாவின் இந்திய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினைகள் மீது நான் தீவிரம் காட்டவில்லை என்று அர்த்தமல்ல என கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர் விளக்கினார்
முன்னாள் பெர்மாத்தாங் பாவ் எம். பி., பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும், பகட்டு நடவடிக்கைகளை விட நாட்டுக்கும் மக்களுக்கும் பயனுள்ள நல்ல பல விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சில நேரங்களில் திரைக்குப் பின்னால் பணியாற்ற வேண்டுமென்ற நிலை ஏற்பட்டாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்று செய்ததாகக் கூறினார்.
13 வது மலேசியா திட்டத்தில் (13 எம்பி) இந்திய சமூகத்தை மேம்படுத்துவது குறித்து செய்தியாளர் விளக்க கூட்டத்திற்கு கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் வழங்கிய உரையில் “நீண்ட காலமாக, நான் அமைதியாக வேலை செய்யத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால் நான் பிரபலத்தை விட பலன் மிக்க ஒரு செயலில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளேன். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் எவ்வளவு சத்தமாக பேசுகிறோம் என்பது அல்ல, ஆனால் நமது வேலை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வருகிறதா? என்பதுதான்”. என்ற அவரின் உரையை செய்தியாளர் விளக்க கூட்டத்தில் முன்னாள் கிள்ளான் எம். பி. சார்லஸ் சந்தியாகோ வாசித்தார்.
அந்த உரையில் மேலும், இந்திய சமூகம், குறிப்பாக பி 40 குழுவில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களை மையமாகக் கொண்ட பள்ளி இடைநின்றல் விகிதங்கள், வறுமை, நாடற்றவர் அடையாள பத்திர விவகாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகளை உருவாக்க பொருளாதார வல்லுநர்கள், அரசு ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் தொடர்ச்சியான நிபுணர் தலைமையிலான வட்ட மேஜை ஆலோசனைகளை ஏற்பாடு செய்து சில காலங்களாக இணைந்து பணியாற்றி வருவதாக நூருல் இஸ்ஸா கூறினார்.
இல்திஸாம் அறக்கட்டளை மலேசியா மற்றும் 200 க்கும் மேற்பட்ட சிவில் சமூக ஆர்வளர்கள் இணைந்து உருவாக்கி முன்மொழியப் பட்டதுமான இந்த திட்ட வரைவில் அடையாளம் கண்டுள்ள தேசிய பாலர்கள் கல்விக் கொள்கை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்குதல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான தொழில் முனைவோர் காப்பகம் மற்றும் வெளிப்படையான ஒருங்கிணைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதற்கான சட்டரீதியான அமைப்பு ஆகிய முக்கிய முன் மொழிவுகளையும் நூருல் இஸ்ஸா வரவேற்று முன்மொழிவுகளை கவனத்தில் கொள்வதாகவும் கூறினார்.
அதனை தொடர்ந்து கருத்துரைத்த சந்தியாகோ, வரவிருக்கும் 13 வது மலேசிய திட்டத்தில் மலேசிய இந்தியர்களின் ஓரங்கட்டப்படுவதை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு ஒரு மூலோபாய வாய்ப்பை இத்திட்டம் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவில் உள்ள இந்தியர்கள், கடந்த கால மலேசிய திட்டங்களில் சமூகத்தை மேம்படுத்த எந்த ஒரு அர்த்தமுள்ள உறுதியான நடவடிக்கையும் இன்றி, ஒரு புறக்கணிக்கப்பட்ட இரண்டாம் தர குடிமக்களாக நீண்ட காலம் வாழ்ந்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
அமைச்சரவை உறுப்பினர்கள் கருத்துக்களுக்கு ஒப்ப, ரபிசி ராம்லி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நிதியமைச்சர் II அமீர் ஹம்ஸா அஜீசன் பொருளாதாரத் துறையை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும், 13 மலேசிய திட்டத்தின் மறுசீரமைப்புக்கும் அவர் தலைமை தாங்குவார் என்றும் அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

