
சென்னை, ஆக 3-
சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் நேற்று மாலையில் காலமானார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மதன் பாப், 71, உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.
மதன் பாப்பின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. அடிப்படையில் இசைக் கலைஞரான இவர் கிட்டாரிஸ்ட்டாக இருந்துள்ளார்.
தூர்தர்ஷன் டிவியில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார். அதன்பின்னர் கே.பாலசந்தரின் அறிமுகத்தால் நடிப்பில் இறங்கினார்.
‛நீங்கள் கேட்டவை’ படத்தில் கீ போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் ‛வானமே இல்லை, தேவன் மகன், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், ப்ரெண்ட்ஸ், தெனாலி, ஐயா, வேல்’ உள்ளிட்ட 200 படங்கள் வரை நடித்துள்ளார்.
சினிமா தவிர்த்து டிவி காமெடி ஷோக்களிலும் நடுவராக பணியாற்றி உள்ளார்.
பெரும்பாலும் காமெடி ரோல்களில் நடித்து வந்த இவர் பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். இவரின் டிரேட் மார்க்கே அவரின் சிரிப்பு தான்.
இவர் சிரிக்க ஆரம்பித்தால் சில வினாடிகள் சிரித்துக் கொண்டே இருப்பார். மேடை நாடகம், விளம்பரங்கள், டிவி சீரியல்கள் என பலவற்றிலும் அசத்தி உள்ளார். அதுமட்டுமல்ல இவர் தனது இளம் வயத்தில் குத்துச்சண்டை வீரராகவும் இருந்துள்ளார்.
மதன் பாப்பின் உடன் சென்னை, அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவருக்கு சுசிலா என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும், அர்ஷித் என்ற மகனும் உள்ளனர். ஜனனி, சினிமாவில் பாடகியாக வலம் வருகிறார்.
இவரின் மறைவு செய்தி கேட்டு திரையுலகத்தினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

